எறும்புகளோடு ஓர் பேச்சு வார்த்தை
எறும்புகளே! எறும்புகளே ! உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே !
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே !
உலகின் மிகச் சிறிய ஆச்சரியமே !
உங்களோடு பேச வேண்டும்
சிறிது நேரம் செவிசாய்ப்பீரா?
" நின்றுபேசி நேரங்கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும் "
ஒரு சென்ட்டி மீட்டரில் ஊற்றி வைத்த உலகமே !
அற்ப உயிரென்று
அவலப்பட்டதுண்டா ?
" பேதை மனிதரே !
மில்லி மீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடை போல ஐம்பது மடங்கு
எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா ? "
உங்கள் பொழுது போக்கு ..........? " வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு
ஆறு முதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு - இதில்
ஓய்வென்ன ஓய்வு - தலை
சாய்வென்ன சாய்வு ? "
இந்த ஆயுளுக்கா இத்தனை பாடு?
" உம்மைப் போல எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
செரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று
செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு "
இனப் பெருமை பற்றிச் சிறுகுறிப்பு வரைக ........
" சிந்து சமவெளிக்கு முற்பட்டது எங்கள்
பொந்து சமவெளி நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம் -
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை -
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லா இடுகாடு -
மாரிகாலச் சேமிப்புக்கிடங்கு -
எல்லாம் அமைந்தது எங்கள் ராஜாங்கம்
எங்கள் வாழ்கையின்
நீளமான நகல் தான் நீங்கள் "
உங்களையே நீங்கள் வியந்து கொள்வதெப்போது ?
மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்து விடும் எங்கள்
மத யானைக்குள் புகுந்து
மாய்த்து விடும் போது "
நீங்கள் வெறுப்பது .... நேசிப்பது ......?
" வெறுப்பது -
வாசல் தெளிக்கையில்
வந்து விழும் கடல்களை
நேசிப்பது -
அரிசிமாக் கோலமிடும்
அன்னப் பூரணிகளை
சேமிக்கும் தானியம்
முளை கொண்டால் ஏதுசெய்வீர் ...?
" கவரும் போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முனைகளைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா ! "
உங்களால் மறக்க முடியாதது .....?
" உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில்
எங்கள் நான்காயிரம் முன்னோர்கள்
நசுங்கிச் செத்தது "
எதிர்வரும் எறும்புகளை மூக்கோடு மூக்குரசும் காரணம் ....?" எங்கள் காலனி எறும்புதானாவென மோப்பம் பிடிக்கும் முயற்சியது எம்மவர் என்றால் வழி விடுவோம்அன்னியர் என்றால் தலையிடுவோம் " சிறிய மூர்த்திகளே - உங்கள் பெரிய கீர்த்தி எது....?" அமேஸான் காட்டு ராணுவ எறும்புகள் யானை - வழியில் இறந்து கிடந்தால் முழுயானை தின்றே முன்னேறுவோம் மறவாதீர் !எறும்புகளின் வயிறு யானைகளின் கல்லறை " சாத்வீகம் தானே உங்கள் வாழ்க்கை முறை ...........?
" இல்லை
எங்களுக்குள்ளும் வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு "
எறும்புகளின் சத்தமா
இதுவரை கேட்டதில்லை ........
" மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள் என்ன செய்யும் ..?"
நன்றி எறும்பே நன்றி
" நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு "
எதற்கு ? எதற்கு ?
" காணாத காமதேனு பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த
புராணம் வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு "